மனைவியுடன் கள்ளக் காதல் உறவில் இருந்தவரையும், மனைவியையும் கணவர் தீயிட்டு எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளத்தை சேர்ந்த 38 வயதான செந்தில் வேல்முருகன் - அவருடைய மனைவி லட்சுமி தம்பதிக்கு, 13 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே, செந்தில் வேல்முருகன் பெயிண்டராக வேலை செய்து வரும் நிலையில், அவருடைய மனைவி லட்சுமிக்கு, எம்.ஜி.ஆர். நகர் தியாகி குப்பன் தெருவைச் சேர்ந்த 62 வயதான காவலாளி கோவிந்தசாமியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இதனால், கள்ளக் காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல், கணவர் செந்தில் வேல்முருகனுக்கு தெரியவர, அவர் இது தொடர்பாக தனது மனைவியுடன் கேட்டுள்ளார். இதனால், கணவன் - மனைவிக்குள் கடும் சண்டை வந்துள்ளது.

இதில், கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமி, நேராக கள்ளக் காதலன் கோவிந்தசாமி வீட்டில் போய் தங்கி உள்ளார். இதனால், இன்னும் கோபமடைந்த லட்சுமியின் கணவர் செந்தில் வேல்முருகன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நேராக கோவிந்தசாமி வீட்டிற்குச் சென்று இருவரையும் தாக்கிவிட்டு, இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இருவர் மீதும் தீ பற்றி எரிந்த நிலையில், இவரும் அலறி துடித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், லட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கோவிந்தசாமியுடன் தங்கியிருந்த லட்சுமி குறித்து விசாரணை நடத்தி, அவரது கணவர் செந்தில் வேல்முருகனை கைது செய்து விசாரித்துள்ளனர். இதில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டதால், அவரை சிறையில் அடைத்தனர்.

அத்துடன், 64 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்காதலன் கோவிந்தசாமியும், தற்போது உயிரிழந்துள்ளார். இதனால், செந்தில் வேல்முருகன் மீது தற்போது இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, குடும்பம் நடத்த வராத மனைவியை கணவனே, கள்ளக்காதலனோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.