ஊரடங்கையும் மீறி சென்னை பாடி மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

இதனிடையே, உணவு, பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் கடைகளுக்கு வந்து செல்கின்றனர்.

இதனிடையே, சென்னை முழுவதும் போலீசார் முழு வீச்சில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் விரிச்சோடி காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை பாடி அருகே இன்று காலை முதல் சாலையில் வாகனம் ஓட்டி வரும் நபர்களிடம் கொரோனா இருக்கிறதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதனால், ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த சாலையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான வாகனங்கள் வந்ததால், அந்த பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, அங்கு சமூக விலகம் என்பது கேள்விக்குறியானது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அச்சம் அடைந்தனர்.

இதனால், தேவையற்ற பயணங்களை மேற்கொண்டவர்கள் மீது போலீசார் வழங்குப் பதிவு செய்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் பீதியடைந்தனர்.

மேலும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, கொரோனா பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, அனைத்து வாகனங்களும் கலைந்து சென்றன. இதனால், சென்னையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, பாடி மேம்பாலத்தின் 3 புறமும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதால் மட்டுமே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.