இந்தியாவில் கொரேனாவுக்கு 1,400 பேர் பாதிப்பு! 35 பேர் பலி..
By Aruvi | Galatta | 11:34 AM
இந்தியாவில் கொரோனாவால் 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனாவின் தீவிரத்தை தற்போது தான், இந்தியா முழுமையாக உணரத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும், அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காகச் சிலர் கடைகளுக்கு வருவது வாடியாக நடந்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவில், வழக்கத்தை விட சற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதிதாக 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 124 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், 1,238 பேர் சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வந்த நிலையில், சிறுநீரகம் செயலிழந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அத்துடன், கேரளாவில் கொரோனா வைரசால் இதுவரை 215 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக, மேற்கு வங்கத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் சுமார் ஆயிரத்து 400 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் வேகமாக பரவக்கூடிய 10 இடங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.