சினிமாவை மிஞ்சும் அளவுக்கு, நடுக்கடலில் தமிழக மீனவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே உள்ள கடலில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் 2 விசைப்படகில் சென்று, அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 50 க்கும் மேற்பட்டோர், 20 க்கும் மேற்பட்ட பைபர் படகில் அங்கு வந்து, சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தியது குறித்து கேட்டதாக தெரிகிறது.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே நடுக்கடலிலேயே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும், தங்கள் படகிலிருந்த கற்கள், பாட்டிகல்கள் போன்றவற்றை எடுத்து ஒருவர் மீது ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர்.

இதில், இரு தரப்பிலிருந்தும் சுமார் 17 பேர் காயமடைந்தனர். அவர்களில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்ததாகவும், 2 படகுகள் முற்றிலும் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, காயம் அடைந்தவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கீச்சாங்குப்பம் மீனவர்கள் தாக்குதல் நடத்தியது சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பரவியதால், தாக்குதலுக்கு உள்ளான வெள்ளப்பள்ளத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள், திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈபட்டனர்.

இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன், மீனவர்கள் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால், பதற்றத்தைத் தணிக்கும் விதமாக இரு கிராமங்களிலும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.