ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்த நாய் ஒன்று, குழந்தையை கடித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்த ரவிக்குமார் மனைவி காஞ்சன், கருவுற்று நிறைமாத கர்ப்பிணியான அவர், பிரசவத்துக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, காஞ்சனுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை ஆபரேஷன் தியேட்டரில் சிறிது நேரம் இருக்க வேண்டும் என்றும், ஆனால் தாயை நார்மல் வார்டில் மாற்றலாம் என்றும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

பின்னர், காஞ்சனை நார்மல் வாடுக்கு மாற்றப்பட்ட நிலையில், நாய் ஒன்று அறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்துவிட்டதாகக் கூறி, ஊழியர் ஒருவர் சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து, ரவிக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது, அந்த நாய் குழந்தையை கை, கால், முகம் என்று பல இடங்களில் கடித்து வைத்திருந்தது. இதில், குழந்தைக்கு உடல் முழுக்க ரத்தம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ரவிக்குமார், நாயை விரட்டியடித்துள்ளார்.

இதன் பிறகு, ரவிக்குமார் கூச்சலிட்டுக் கத்தவே, அங்கு ஓடிவந்த மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தனர். அப்போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், மேலும் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை ரவிக்குமார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆபரே‌ஷன் தியேட்டருக்குள் புகுந்த நாய் ஒன்று குழந்தையைக் கடித்துக் கொன்ற சம்பவம் அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.