கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு உலகமே அஞ்சி நடுங்கி வரும் வேளையில், அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான தீவிர முயற்சிகளை உலக நாடுகள் எல்லாம் ஈடுபட்டுள்ளன.

அதே நேரத்தில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகின்றன. இப்படியான ஒவ்வொரு ஆய்விலும் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தொடக்கத்தில், காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவையே கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்று, உலக சுகாதார அமைப்பு பட்டியில் வெளியிட்டு வந்தது.

அதேபோல், கொரோனா வைரஸ் இருந்தால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கூறியது.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படுவது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கிய பின்பு, இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு வெளியில் தெரிய வரும் என்றும், சிடிசி கூறியுள்ளது.

அதன்படி, புதிய அறிகுறிகளா,

- காரணமின்றி உடல் குளிர்வது போன்று உணர்தல்
- காரணமே இல்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல்
- கடுமையான வேலை செய்யாத நிலையிலும் தசை வலி ஏற்படுதல்
- திடீரென தோன்றும் தலைவலி
- சுவை மற்றும் வாசனை உணர்வு குறைந்துபோதல்

ஆகியவே அந்த புதிய அறிகுறிகள் என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி தெரிவித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட அறிகுறிகள் அனைத்தும், உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. இந்த புதிய அறிகுறிகளால், உலக மக்கள் யாவரும் இன்னும் பீதியடைந்துள்ளனர். அத்துடன், இந்த அறிகுறிகள் அனைத்தும், வயது மூப்பால் உள்ள பலர் இயல்பாகச் சந்திக்கும் பிரச்சனைகள் என்றும் கூறப்படுகிறது. இதனால், மூத்த வயதுடையோர் இன்னும் பீதியடைந்துள்ளனர்.