சென்னையில் கொரோனா பாதிப்பு.. ஆபத்தான 6 மண்டலங்கள்!
By Aruvi | Galatta | Apr 28, 2020, 10:40 am
சென்னையில் மிகத் தீவிரமாக கொரோனா பரவி வரும் நிலையில், ஆபத்தானவை என்று 6 மண்டலங்களை, சென்னை மாநகராட்சி பட்டியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 52 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் 47 நோயாளிகள் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனாவால் 575 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 173 பேர், குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மண்டலம் வாரியாக பார்க்கையில், சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திரு.வி.க நகரில் 94 பேரும், தண்டையார்பேட்டையில் 66 பேரும், தேனாம்பேட்டையில் 56 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 53 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், வளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 17 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், அம்பத்தூரில் 15 நபரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க. நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது என்றும், இந்த 6 மண்டலங்களும் மிக ஆபத்தானவை என்றும் சென்னை மாநகராட்சி பட்டியிட்டுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி வரை ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்த அம்பத்தூர் மண்டலத்தில், நேற்று முன்தினம் வரை 2 கொரோனா தொற்று இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 13 தொற்று அதிகரித்து உள்ளது, அனைவரையும் கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதிலும் குறிப்பாக, சென்னையில் கொரோனாவுக்கு ஆண்கள் 64.32 சதவீதம் பேரும், பெண்கள் 35.68 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 123 பேரும், 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 120 பேரும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 168 பகுதிகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவது, சென்னை மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.