'காவிரி காப்பாளன்' விருது பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வயலில் இறங்கி நாற்று நட்டு.. மாட்டு வண்டி ஓட்டிய நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விவசாய பூமியான காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த, முதலமைச்சர் பழனிச்சாமிக்கு, அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் இருந்து, திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு சாலையின் இருமங்கிலும் காத்திருந்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

அப்போது, சித்தமல்லி என்ற இடத்தில் விவசாயிகள் நாற்று நடுவதைப் பார்த்த முதலமைச்சர், திடீரென வயலில் இறங்கி விவசாயிகளிடம் உரையாடினார். அப்போதும், விவசாயிகளுடன் சேர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, வயலில் நாற்று நட்டார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் நாற்று நட்டார்.

இதனையடுத்து, அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் முன்னிலையில் மாட்டு வண்டி ஓட்டினார். அப்போது, சாலையின் இருபுறமும் விவசாயிகளும், பொதுமக்களும் கூடி, நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

மாட்டு வண்டியை முதலமைச்சர் ஓட்டும்போது, அவருடன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உடன் இருந்தார். தற்போது முதலமைச்சர் மாட்டு வண்டி ஓட்டி வந்த காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “ஒரு விவசாயி மாட்டு வண்டி ஓட்டியது போலவே இருப்பதா” பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, திருவாரூரில் பாராட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சருக்கு, 'காவிரி காப்பாளன்' விருதை வழங்கி, விவசாயிகள் கவுரவித்தனர்.

இதனைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், “காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்று உறுதி” அளித்தார்.

மேலும், “ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.