13 வயது சிறுமிக்குக் கடந்த 6 மாதமாக ஆபாச படம் காண்பித்துத் துன்புறுத்தி வந்த அரசியல் பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் அனைவரும் விரைவில் அடுத்தடுத்து கைது செய்யப்படுவார்கள் என்றும்கடந்த 2 மாதங்களா போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி, சிலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற 52 வது வட்ட தலைவராக இருந்து வரும் 68 வயதான ரவி, தன் வீட்டின் அருகே வசிக்கும் 8 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமியை, வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குச் சென்றதும், தன் செல்போனில் உள்ள சிறுமிகளின் ஆபாசப் படங்களைக் காட்டி, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை, அங்குள்ள பக்கத்து வீட்டில் வசித்த நபர் பார்த்துவிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த புகார் அங்குள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், காவல் துறையின் உதவியுடன் சிறுமியை மீட்ட போலீசார், அந்த அதிமுக பிரமுகரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை இதுபோன்று கடந்த 6 மாதங்களாக ஆபாச படம் காட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், இது குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். இதனையடுத்து, அவரை தங்களது பாணியில் நன்றாகக் கவனித்த போலீசார், அதிரடியாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, போலீசார் ரவியை அழைத்துச் செல்லும்போது, அப்பகுதி மக்கள் திரண்டு, காமூகன் ரவியைத் தாக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.