காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
By Arul Valan Arasu | Galatta | 05:30 PM
காதல் ஜோடி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகா் அருகே சூலக்கரை ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வில்லி பத்திரியைச் சேர்ந்த 24 வயதான சரவணக்குமார், அங்குள்ள ரோசல்பட்டி பகுதியை சேர்ந்த 21 வயதான ரஞ்சிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கல்லூரிகளில் படிக்கும்போதே, காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலை இருவீட்டிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், கடந்த சில நாட்களாகவே மனம் உடைந்து காணப்பட்ட காதல் ஜோடி, நேற்று சூலக்கரை ரயில்வே கேட் அருகே, திருவனந்தபுரத்திலிருந்து திருச்சி செல்லும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டனர்.
ரயில் மோதியதில், இருவரின் உடல்களும் 4 புறமும் சிதறிக்கிடந்தன. இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, காதலுக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், விருதுநகரில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.