144 தடையை மீறி செயல்பட்டதாகத் தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களை அரசும், காவல்துறையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, அத்திவாசிய தேவைகளுக்கு மட்டுமே சிலர் கடைகளுக்கு வெளியே வரும் நிலையில், பலர் அந்த தடை உத்தரவை மதிக்காமல் அடம் பிடிப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால், தொடக்கத்தில் தடை உத்தரவை மீறி செயல்பட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், அதன்பிறகு தடை உத்தரவை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களைத் தாக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து, முதல் முறை தடையை மீறும் வாகனங்கள் மீது பெயிண்ட் அடித்து அடையாளம் இடப்பட்டு எச்சரித்து அனுப்பப்படும் நிலையில், 2 வது முறையாக அவர்கள் தடையை மீறி செயல்பட்டும் பட்சத்தில், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, தமிழகக் காவல்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு” செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், “தடை உத்தரவை மீறியதாக காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றிய 69,589 வாகனங்கள் பறிமுதல்” செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதுவரை தடையை மீறி செயல்பட்டவர்களிடமிருந்து 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்” தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லை மாவட்டத்தில் கொரானா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெல்லை மாவட்டத்தில் மட்டும் நான்கு சக்கர வாகனங்களை இயக்கத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 கிலோமீட்டருக்கு உள்ளேயே பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். அதை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் நெல்லை மாவட்ட போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், கொரோனா தொற்றுள்ளவருடன் தொடர்பிலிருந்தவர் எங்கெல்லாம் சென்றனர்? யாருடன் அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள்? என்பதைக் கண்டறிந்து, சங்கிலித் தொடர் போல் அடுத்த கட்ட பட்டியலை போலீசார் தயாரிப்பார்கள்" என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, 144 தடை உத்தரவை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தடையை மீறி செயல்படுவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால், 144 தடை சட்டம் தமிழகத்தில் இன்னும் முழு வீச்சில் போலீசார் நடைமுறைப்படுத்த உள்ளனர்.