ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு!
By Aruvi | Galatta | 04:14 PM
ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுமைக்கும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். சிலர் மட்டுமே அத்திவாசிய தேவைகளுக்காக வெளியே வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் கவலைத் தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக 257 வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
குறிப்பாக, மார்ச் முதல் வாரத்தில் 116 குற்றச் சம்பவங்கள் மட்டுமே நடந்ததாகக் குறிப்பிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம், மார்ச் முதல் வார காலத்தில் மட்டும் 2 பாலியல் பலாத்காரம் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளது. ஆனால், மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் அது 13 ஆக அதிகரித்துள்ளதாகத் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக, 69 புகார்கள் வீடுகளில் நிகழும் வன்முறைகள் குறித்து வந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேஹா ஷர்மா கூறியுள்ளார்.
தற்போது ஊரடங்கு காலம் என்பதால், இதுபோன்ற புகார்கள் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலமாக வருவதாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாக, இணையத்தை உபயோகிக்கத் தெரியாத பல பெண்களின் புகார்கள் இன்னும் வராமல் இருக்கலாம் என்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேஹா ஷர்மா கவலைத் தெரிவித்தார்.
மேலும், உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து தான் அதிக அளவிலான புகார்கள் வந்துள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது.