இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 109.. பாதிப்பு 4 ஆயிரத்து 100 யை கடந்தது!
By Aruvi | Galatta | 11:25 AM
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 100 யை தாண்டிய நிலையில், பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் எதிர்பார்த்ததை விட, கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், கொரோனாவால் சூழ்ந்த இருளை அகற்றும் வகையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, நாடு முழுவதும் நேற்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் அகல் விளக்கு, மெழுகுவர்த்திகளை ஏற்றி, இந்தியாவைத் தீப ஒளியால் மிளிரச் செய்தனர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம் போபாலில் கொரோனா பாதிப்பு காரணமாக 62 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இதனால், அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்தது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உயிரிழப்பு 45 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 100 யை தாண்டிய நிலையில், பலி எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 292 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் 42 பேர் வரை குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர், 60 வயதுக்குக் குறைந்தவர்கள் தான் என்றும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, கொரோனா பரவலைத் தடுப்பது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசியில் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.