10, 11 ஆம் வகுப்பு படிக்கும் சிறப்பு மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்ல 49 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று காரணமாகப் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலதரப்பட்ட மக்களும் முகக்கவசம் அணிவதும் அவ்வப்போது சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் பயன்படுத்தி கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் பள்ளிகள், நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களையும் கிருமிநாசினி உபயோகம் செய்து தூய்மையாக வைத்துக் கொள்ள அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளது.

மேலும், “சிறப்புப்பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்துகொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கிப் பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்து மூலம் 49 சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே தங்கள் இருப்பிடம் அலைபேசி எண் விவரங்களை தங்கள் பள்ளி நிறுவனத்தின் மூலம் இத்துறைக்குத் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சிறப்பு மாணவர்கள் உடன், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம் என்றும், இப்பேருந்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு 8.6.2020 காலை 8.00 மணி முதல் பயணம் செய்யலாம் என்றும், மீண்டும் தேர்வு முடிந்த உடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு 26.6.2020 அன்று காலை 8.00 மணிக்குப் புறப்பட்டுத் திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும்” அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “சிறப்பு பேருந்தில் பயணம் தொடங்கு முன்பு, அனைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், பாதுகாவலர்களின் உடல்நிலையினை பரிசோதித்து நோய் தொற்று இல்லாமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், பயணம் மேற்கொள்ளும் பேருந்து இருக்கையில் அறிவுறுத்தப்பட்ட சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.