கள்ளக் காதலால், காதலன் உடன் சேர்ந்து கணவரைக் கொன்று வீட்டின் கிச்சனிலேயே மனைவி புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மும்பை நகரில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

மும்பையில் உள்ள தஹிசர் சாவல் பகுதியில் இருக்கும் ராவால்பாடாவைச் சேர்ந்த ராயிஸ் ஷாயிக் என்பவருக்கு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஷாகிதா என்கிற இளம் பெண்ணுடன் இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, ராயிஸ் ஷாயிக் - ஷாகிதா தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். இப்படியாக, இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையில் ஈடுபட்டிருந்ததின் பலனாக, இந்த தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் இருவரும், அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், கடந்த மே 21 ஆம் தேதி அன்று, வீட்டில் இருந்து வேலைக்குச் சென்ற கணவன் ராயிஸ் ஷாயிக், அன்று இரவு வீடு திரும்ப வில்லை என்று கூறப்படுகிறது.

கணவன் இரவு வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி ஷாகிதா, அங்குள்ள தஹிசர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அத்துடன், காணாமல் போனதாகக் கூறப்படும் கணவன் ராயிஸ் ஷாயிக், பற்றி தீவிரமாக போலீசார் விசாரித்த வந்தனர்.

அப்போது, ஷாகிதாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் அமித் விஷ்வகர்மா என்பவருடன் கள்ளக் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது.அமித் விஷ்வகர்மா, மும்பையில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

தினமும் கணவன் ராயிஸ் ஷாயிக், வேலைக்குச் சென்ற நிலையில், அவர் வீட்டிற்கு வரும் அமித் விஷ்வகர்மா, அடிக்கடி ஷாகிதா உடன் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியாக, இவர்களது கள்ளக் காதல் சென்றுகொண்டிருந்த நிலையில் தான், கணவன் ராயிஸ் ஷாயிக் கடந்த மே 21 ஆம் தேதிக்கு பிறகு காணாமல் போனதை போலீஸார் தெரிந்துகொண்டனர்.

அத்துடன், அவர் மனைவி ஷாகிதா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது தொடர்பாக ஷாகிதாவிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், ஷாகிதா முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்து உள்ளார். இதனால், இன்னும் சந்தேகம் அடைந்த போலீசார், அவருடைய வீட்டை
பரிசோதனை செய்தனர்.

இந்த சோதனையில், ஷாகிதா வீட்டு கிச்சனில் புதிதாக டைல்ஸ் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் முற்றிலுமாக சந்தேகம் அடைந்தனர்.

இதனையடுத்து, போலீசார் அந்த டைல்ஸ்களை அகற்றிவிட்டு அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அங்கு, சாக்குப்பையில் அவரது கணவனின் உடல் அழுகிய நிலையில் இருந்து உள்ளதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஷாகிதாவிடம் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்த விசாரணையில், “கள்ளக் காதலுக்கு இடையூறாக வந்த கணவன் ராயிஸ் ஷாயிக் இருந்ததால், மனைவி ஷாகிதாவுக் தனது காதலன் அமித்துடன் சேர்ந்து, கணவனைக் கொலை செய்ததை” ஒப்புக் கொண்டார்.

“அமித்தின் உதவியுடன் ஷாயிக்கின் உடலை சாக்குப் பையில் கட்டி, சந்தேகம் வராமல் இருப்பதற்காக, கிச்சன் டைல்ஸை எடுத்து, அதன் அடியில் புதைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், ஷாகிதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள கள்ளக் காதலன் அமித்தை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.