தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக வருகிற டிசம்பர் 3-ம் தேதி திரைக்கு வருகிறது பேச்சுலர் திரைப்படம். மேலும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான, இயக்குனர் மதி மாறன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் செல்ஃபி, மற்றும் இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் காதலிக்க யாருமில்லை ஆகிய திரைப்படங்களும் ஜீவி நடிப்பில் தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் பிரகாஷ் குமார் நடித்த திரைப்படம் ஜெயில். க்ரிக்கஸ் சினி க்ரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள ஜெயில் படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், பசங்க பாண்டி மற்றும் ரவி மரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் ரேமண்ட் டெரிக் படத்தொகுப்பு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் ஜெயில் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் முன்பு வெளிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வரும் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயில் படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது இந்த வழக்கில் சுமுகத் தீர்வு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி ஜெயில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.