ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களில் இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கான சிறப்பு 4 மணி காட்சி மற்றும் மூன்றாவது பாடல் குறித்த முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களில் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்தில் அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்கம் செய்ய, ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார் இதுவரை வெளிவந்த இரண்டு பாடல்களையும் விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அக்டோபர் 5ம் தேதி வெளிவந்த லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. கழுதைப்புலி உடனான மிரள வைக்கும் ஒரு சண்டைக் காட்சி VFX மிகத் தரமாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். மேலும் மிரட்டலான ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் பக்கா ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கு முன்பே முன்பதிவில் மிகப்பெரிய வசூல் சாதனைகளை தொடங்கிய தளபதி விஜய் லியோ திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் எனவும் கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அக்டோபர் 5ம் தேதி இரவு X பக்கத்தில் ஸ்பேஸில் உரையாடிய லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரு.SS.லலித் குமார் அவர்கள் இதுவரை எந்த தென்னிந்திய திரைப்படமும் வெளிவராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் 25,000 முதல் 30,000 திரையரங்குகளில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தென்னிந்தியாவில் ஸ்பெஷலான ப்ரோமோஷன் பணிகள் நடைபெற இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். அதேபோல், “ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸாக லியோ திரைப்படத்தின் 3வது பாடலை அடுத்த வாரம் திங்கட்கிழமை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் லியோ திரைப்படத்திற்கான அதிகாலை 4 மணி ஸ்பெஷல் காட்சிக்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு இருப்பதாகவும் விரைவில் அது குறித்த நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்புகளால் தளபதி விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.