'அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது!'- ஜெயிலர் படத்தில் உடன் நடித்த மாரிமுத்துவின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல்,Superstar rajinikanth deep condolences for actor marimuthu demise | Galatta

தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்த நடிகர் மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். தனக்கென தனி பாணிகள் நடித்த ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் மாரிமுத்து இன்று செப்டம்பர் 8ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். தனது திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் உதவி இயக்குனராக ராஜ்கிரன் மணிரத்தினம் வசந்த் சீமான் எஸ் ஜே சூர்யா ஆகியோரோடு உதவி இயக்குனராக இணைந்து பணியாற்றிய மாரிமுத்து அவர்கள் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தொடர்ந்து நடிகராக மிஷ்கினின் யுத்தம் செய், ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், விஷ்ணு விஷாலின் ஜீவா, கார்த்தியின் கொம்பன், கடைக்குட்டி சிங்கம், விஷாலின் மருது, தனுஷின் கொடி, விஜய் சேதுபதியின் லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் மாரிமுத்து அவர்கள் நடித்திருக்கிறார். 

குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த பரியேறும் பெருமாள் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்த நடிகர் மாரிமுத்து அவர்கள், கடைசியாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் "பன்னீர்" மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய இடத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் மெகா தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் தற்போது சன் தொலைக்காட்சியில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் மெகா தொடரில் ஏஜிஎஸ் எனும் ஆதிமுத்து ஞானசேகரன் எனும் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். குறிப்பாக இவரது ஃபேவரட் வசனமான "ஏமா ஏய்" என்ற வசனத்தை மக்கள் ஒரு நாளும் மறக்க முடியாது. 

யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென நடிகர் மாரிமுத்து உயிரிழந்ததாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று செப்டம்பர் 8ம் தேதி காலை டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் மாரிமுத்து திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. திடீரென அது தீவிர மாரடைப்பு ஏற்பட்டதால் நடிகர் மாரிமுத்து காலமானார். 57 வயதாகும் மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இரங்கலை வெளியிட்டு இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர் அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அந்த இரங்கல் இதோ…
 

மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி.

— Rajinikanth (@rajinikanth) September 8, 2023