மக்களின் மனம் கவர்ந்த நடிகர் மாரிமுத்து திடீரென காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல நடிகர் மாரிமுத்து திடீரென காலமானார்,Edhirneechal actor marimuthu passes away due to heart attack | Galatta

ஒட்டுமொத்த தமிழ்நாடு சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான மாரிமுத்து அவர்கள் திடீரென காலமானார். ஆரம்ப கட்டத்தில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய மாரிமுத்து அவர்கள் இயக்குனர் நடிகருமான ராஜ்கிரன் அவர்களின் அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசா தான் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் வசந்த், சீமான் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கினார். தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு விமல் & பிரசன்னா மற்றும் ஓவியா ஆகியோர் இணைந்து நடித்த புலிவால் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

தொடர்ந்து நடிகராக பல்வேறு படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் மாரிமுத்து அவர்கள் மிஷ்கினின் யுத்தம் செய், ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில், விஷ்ணு விஷாலின் ஜீவா, கார்த்தியின் கொம்பன், கடைக்குட்டி சிங்கம், விஷாலின் மருது, தனுஷின் கொடி, விஜய் சேதுபதியின் லாபம், சிவகார்த்திகேயனின் டாக்டர், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த பரியேறும் பெருமாள் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்த நடிகர் மாரிமுத்து அவர்கள், கடைசியாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய இடத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா மட்டுமல்லாது சின்னத்திரையிலும் மெகா தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து அவர்கள் தற்போது சன் தொலைக்காட்சியில் மிக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் எனும் மெகா தொடரில் ஏஜிஎஸ் எனும் ஆதிமுத்து ஞானசேகரன் எனும் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். குறிப்பாக இவரது ஃபேவரட் வசனமான "ஏமா ஏய்" என்ற வசனத்தை மக்கள் ஒரு நாளும் மறக்க முடியாது. இப்படியாக தனக்கென தனி பாணியில் தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் மாரிமுத்து தற்போது திடீரென உயிரிழந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இன்று செப்டம்பர் 8ம் தேதி காலை டப்பிங் பணிகளில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து அவர்கள் திடீரென அசௌகரியம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். மருத்துவமனையை அடைந்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர். அதி தீவிர மாரடைப்பு ஏற்பட்டதால் நடிகர் மாரிமுத்து மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் மாரிமுத்து அவர்களின் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் அவரது உடலை அடக்கம் செய்து இறுதி சடங்குகளை மேற்கொள்ள குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். மக்களின் மனம் கவர்ந்த நடிகர் மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
 

நடிகர் மாரிமுத்து‌ காலமானார்!#Marimuthu #ActorMarimuthu #RIPMarimuthu #Galatta pic.twitter.com/IdANmePxkf

— Galatta Media (@galattadotcom) September 8, 2023