தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஜீவா ஆசையாசையாய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம், டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, சிங்கம்புலி, ரௌத்திரம், நண்பன் ,என்றென்றும் புன்னகை, கவலை வேண்டாம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய நிகழ்வான 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை நிகழ்வை மையப்படுத்தி வெளியான 83 திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்த நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்து மேதாவி & வரலாறு முக்கியம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக தயாராகி வருகின்றன.

இதனிடையே கலகலப்பு 2 படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜெய் இருவரும் இணைந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கின்றனர். இந்த வரிசையில் இயக்குனர் பொன் குமரன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்துள்ள திரைப்படம் கோல்மால்.

ஜாகுவார் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் கோல்மால் படத்தில் தான்யா போப், பாயல் ராஜ்புத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க யோகிபாபு, யூகி சேது, மாளவிகா, ஆர்த்தி, சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் கோல்மால் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மொரீசியசில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோல்மால் படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.