உலக சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து பிரம்மிக்க வைத்து தொடர்ந்து நமது சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ரசிகர்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

அவதார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக அறிவுப்புகள் வெளியானது. அந்த வகையில் அவதார் படத்தின் இரண்டாவது பாகமாக தயாராகியுள்ள அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் தற்போது வெளியான நிலையில், தொடர்ந்து அவதார் திரைப்படத்தின் 3ம் பாகம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ஒட்டு மொத்த உலக சினிமா ரசிகர்களும் மிக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பான (அவதார 2) அவதார்-தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் பிரம்மிப்பின் உச்சமாக 3டி தொழில்நுட்பத்தில் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸாகி, உலகெங்கும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு உலக அளவில் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை தொடங்கிவிட்டது.

இந்நிலையில் தியேட்டரில் அவதார் 2 திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்பவர் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.