தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அருள்நிதி அடுத்ததாக ராட்சசி படத்தின் இயக்குனர் கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட புதிய கெட்டப்பில் அருள்நிதி இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து பலவிதமான த்ரில்லர் படங்களில் நடித்து வரும் அருள்நிதி நடித்துள்ள D-BLOCK திரைப்படம் வருகிற ஜூலை 3-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து இயக்குனர் இன்னிசை பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டைரி திரைப்படமும் ஆகஸ்ட்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே அடுத்த க்ரைம் த்ரில்லர் படமாக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் தேஜாவு. இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், அச்சுத் விஜய், சேத்தன், மைம் கோபி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஒயிட் கார்பட் பிலிம்ஸ் மற்றும் பி.ஜி.மீடியா வொர்க்ஸ் இணைந்து தயாரித்துள்ள தேஜாவு படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அருள்நிதியின் தேஜாவு திரைப்படம் வருகிற ஜூலை 21ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.