தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கியுள்ள புஷ்பா The-Rise Part-1 திரைப்படம் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் புஷ்பா திரைப்படத்தில் ஃபகத் ஃபாசில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். 

மேலும் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, தனஞ்செய், சுனில், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ளது.மிர்ரோஸ்லா குபா ப்ரோஸ்கி ஒளிப்பதிவில், கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ள புஷ்பா திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் புஷ்பா திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புஷ்பா படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ் திரைப்பட ஹீரோக்களின் நடனம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், 

"தமிழ் சினிமா ஹீரோக்களும் சிறப்பாக நடமாடுகிறார்கள். ஒவ்வொரு தலைமுறையிலும் சிறப்பாக நடனம் ஆடக் கூடிய நடிகர்கள் இருக்கிறார்கள். கடந்த தலைமுறையில் கமல்ஹாசனின் நடனம் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் தளபதி விஜய்யின் நடனம் சிறப்பாக இருந்தது, தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் & தனுஷின் நடனமும் சிறப்பாக உள்ளது, எல்லோரும் நன்றாகவே நடனம் ஆடுகிறார்கள் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் நடனமும் சிறப்பாகவே இருக்கிறது. சமீபத்தில் டாக்டர் திரைப்படம் பார்த்தேன், நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டாக்டர் திரைப்படத்தின் இறுதியில் இடம்பெற்ற செல்லமா பாடலும் நன்றாக நடனம் ஆடியுள்ளார்” 

என்று சிவகார்த்திகேயனையும் டாக்டர் திரைப்படத்தையும் புகழ்ந்து டாக்டர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நடிகர் அல்லு அர்ஜுன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…