மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, இதற்கான பணிகளை தொடங்கியது. குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், விரல் ரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதலில் கடந்த ஆண்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்ட அளவில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் இன்று முதல் அமலாகிறது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில், 5 சதவீதம் பொருட்கள் கடைகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்படும்’’ என்றார்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், குடும்ப அட்டை உறுப்பினர் மட்டுமே இனி பொருட்கள் வாங்க முடியும். ஆனால், மலைப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் ‘4 ஜி’ நெட் ஒர்க் அடிப்படையில், விற்பனை முனைய இயந்திரம் செயல்படுவதில் சிக்கல் உள்ளதாகவும், வயதானவர்கள் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அமலாகும் இந்தத் திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள்.

* 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு ரேஷன் அட்டையின் மூலம் நாடு முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும்.

* இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

* தற்போது இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர், இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை எதிலும் பொருட்களைப் பெறலாம்.

* இந்தத் திட்டத்தின் கீழ்வரும் ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்ட பயனாளர் தொகுப்பு, மையப்படுத்தப்பட்ட ஒரு சர்வரில் இணைக்கப்படும். அதனால், ஒரே பயனாளி இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது.

* ஒரு மாநிலத்தில் பதிவுசெய்துள்ள பயனாளி, மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களைப் பெறும்போது, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அதாவது அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும் கோதுமை கிலோ ஐந்து ரூபாய்க்கும் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவு தானியங்களையோ பெற முடியாது.

* அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களைப் பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

* சில சவால்களும் இருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரேஷன் கடைகளில் பிஓஎஸ் (Point of Sale) எந்திரம் மிக அவசியம். இந்தியாவில் தற்போது 77 சதவீதக் கடைகளில் மட்டுமே இந்த எந்திரம் இருக்கிறது. புலம் பெயரும் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பிஹார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன.

* அதேபோல, எந்த காலகட்டத்தில் எங்கிருந்து தொழிலாளர்கள் எங்கே புலம்பெயர்வார்கள் என்பதை கண்காணித்து அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு தானியங்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றபடி இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்களின் செயல்பாடுகள் தீவிரமாக வேண்டியிருக்கும்.

* இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் அட்டைகளே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.