“மக்களுக்கான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி உள்ளதால் தான், கடன் சுமை கூடி இருப்பதாக” திமுகவின் வெள்ளை அறிக்கை குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழகத்தின் நிதி நிலை குறித்து, 120 பக்க வெள்ளை அறிக்கையை நேற்றைய தினம், தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

அதில், “தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது” என்று, கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவலைத் தெரிவித்திருந்தார்.

அதிலும் குறிப்பாக, “ஒரு கிலோ மீட்டர் அரசு பேருந்து ஓடினால், 59 ரூபாய் 15 காசுகள் அரசுப் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுகிறது” என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டு இருந்தார்.

குறிப்பாக, “இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை” என்றும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்த நிலையில், மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது “நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியவில்லை” என்று, குற்றம்சாட்டினார். 

“வரவு செலவு, லாபம் நஷ்டத்தை பற்றியே பேசி வரும் நிதி அமைச்சர், சமூக சேவை குறித்தும் சிந்திக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார். 

“வெள்ளை அறிக்கையில் ஒரு உள் அறிக்கை உள்ளது என்றும், அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது” என்றும், குறிப்பிட்டுள்ளார்.

“ஆனால், அதில் ஆதி திராவிட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, கலர் டி.வி. க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ஏன் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடவில்லை” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

“வெள்ளை அறிக்கையின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை என திமுக தெரிவித்துள்ளது என்றும், சேவைத் துறையின் பற்றாக்குறையை எப்படி நஷ்டம் என கூற முடியும்” என்றும், அவர் மீண்டும் கேள்வி எழுப்பினார்.

“அரசின் செயலாளரை அருகில் வைத்து கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்ட அமைச்சர், அறிக்கைக்கு தான் தான் பொறுப்பு என ஏன் கூற வேண்டும் என்றும், நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு அரசின் சார்பில் பொறுப்பேற்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, “தமிழக மக்களுக்கான திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி உள்ளதால், அதிமுக அரசுக்கு கடன் சுமை கூடி உள்ளது என்றும், பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்தி உள்ளது” என்றும், பெருமையோடு, அவர் நினைவு கூர்ந்தார்.

“அரசின் மீது கடன் சுமை இல்லை என்றால், மக்கள் மீது கடன் சுமை கூடியிருக்கும் என்றும், மக்களை திசை திருப்ப வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என்றும், இந்த வெள்ளை அறிக்கை என்பது வெற்று அறிக்கையாக உள்ளது” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.