டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்புக் கடிதமொன்றை விடுத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர், 

"மக்களும் அவர்களுக்கான அரசியலும், தேர்தல் நேரத்தில் திடீர் அறிவிப்புகளை வெளியிடுவதற்கான பொழுதுபோக்குகள் அல்ல. முழு நேரமும் கடினமான உழைப்பும், இலக்கு தவறாத முனைப்புமே பொதுவாழ்வுக்கான பண்பு.

71 ஆண்டுகளைக் கடந்த திமுகவின் வரலாற்றில் இன - மொழி உணர்வுப் போராட்டங்கள் எந்த அளவுக்குத் தீவிரமான முயற்சிகளுடன் நடத்தப்பட்டனவோ, அதே அளவுக்கு விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டம், நெசவாளர் துயர் துடைப்புப் போராட்டம், விவசாயிகள் நலன் காக்கும் போராட்டம், தொழிலாளர் உரிமைக்கான களங்கள், அரசு ஊழியர் - ஆசிரியர் உரிமைக்கான குரல்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களுக்குமான அறப்போர்க் களங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதே உணர்வு கலந்த நோக்கத்துடன்தான், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக தொடர்ந்து போராடி வருகிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் எவ்வித சேதாரமும் இன்றி மக்களைப் பாதுகாப்பதற்கான மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய மத்திய பாஜக அரசு, வேளாண் சட்டத் திருத்த மசோதாக்களை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. நீண்டகால விளைவுகளை உள்ளடக்கிய மசோதாக்களை மிகக் குறுகிய கால இடைவெளியில் நிறைவேற்றியது.

ஜனநாயகம் எனும் நாணயத்தின் மற்றொரு பக்கமான எதிர்க்கட்சிகளின் குரலைக் கிஞ்சித்தும் செவிமடுக்காமல், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையைப் புறக்கணித்து, அவர்களை வெளியேறச் செய்து, தீர்மானங்களை நிறைவேற்றிச் சட்டமாக்கிய ஜனநாயக விரோதப் போக்கையும் சேர்த்தே நிறைவேற்றிக் கொண்டது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.

இந்த வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து, அவை வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதால், நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். அவர்களின் காயம் பட்ட நெஞ்சத்தைப் புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றில், மத்திய அரசின் இந்தத் திருத்தச் சட்டங்களை ஏற்கமாட்டோம் எனச் சட்டப்பேரவைத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தமிழ்நாட்டிலோ மத்திய ஆட்சியாளர்களின் கண்ணசைவில் நடைபெறும் அடிமை ஆட்சியாளர்கள், 'தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிக்கும் மந்திரியைப் போல', மோடி அரசின் குரலையே எதிரொலித்து, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, அவற்றை நிறைவேற்றிக் கொடுத்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தனர்.

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் மனதை ஆளும் பேரியக்கமான திமுகவின் சார்பில் இந்தத் திருத்தச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

நீதியையும் ஜனநாயகத்தையும் அவமதிக்கும் போக்கினைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் மோடி அரசு, விவசாயிகள் நலன் குறித்துக் கவலைப்படாமல் இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, தங்கள் ஆட்சியை வழிநடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களைத் தாரை வார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வதிலேயே குறியாக இருக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை அவையிலேயே பதிவு செய்ததுடன், அந்தக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

தோழமைக் குரலுக்கும் மதிப்பில்லை; எதிர்க்கட்சிகள் குரலையும் கேட்பதில்லை என்கிற பெரும்பான்மை அகம்பாவமும் ஆணவமும் கொண்ட மத்திய அரசின் போக்கினை உணர்ந்த பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் இந்திய ஒன்றியத்தின் தலைநகரை முற்றுகையிடும் வகையில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை நடத்தி, லட்சக்கணக்கான வாகனங்களில் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் திரண்டு, இந்தியத் தலைநகரில் தொடர் முற்றுகைப் போராட்டதை கடுங்குளிரிலும் மேற்கொண்டு வருகிறார்கள்.

தங்கள் கோரிக்கை நிறைவேறி, வாழ்வுரிமையை மீட்கும் வரை டெல்லியை விட்டுச் செல்ல மாட்டோம் என முகாமிட்டு அங்கேயே சமைத்துச் சாப்பிட்டு ஆண்களும் பெண்களுமாகக் குழந்தைகளுடன் சேர்ந்து போராட்டத்தை நடத்துவதை நாடே வியப்புடனும் வேதனையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

கோரிக்கைகளைப் புறக்கணித்து, பேச்சுவார்த்தை என்ற பெயரிலான மத்திய அரசின் திசை திருப்பல்களையும் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள் ஏற்கவில்லை. எதிர்க்கட்சிகள் மீது பழியைப் போட்டு, மதச்சாயம் பூசிப் போராட்டத்தை நசுக்கலாம் என்கிற ஆட்சியாளர்களின் சதித்திட்டமும் எடுபடவில்லை. நாளுக்கு நாள் வலிமை பெற்றுவரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் ஆதரவு பெருகுகிறது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டக் களத்தில் இறங்கிவிட்டனர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து ஏற்கெனவே திமுகவும் தோழமைக் கட்சியினரும் கரோனா பேரிடர் கால நெறிமுறைகளுக்குட்பட்டு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தற்போது இந்திய ஒன்றியத் தலைநகர் டெல்லியில் இரவு - பகல் பாராது, குளிர் - வெயில் - மழை பாராது போராடும் விவசாயிகளுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக களம் காண்பது குறித்து, நேற்று (டிச.3) மாவட்டச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நாளை (டிச. 5) காலை 10 மணியளவில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுகவின் சார்பில், கரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அறவழியில், ஜனநாயக முறையில் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக நடத்துகிற அறப்போராட்டங்கள் மக்களிடம் இந்த ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவதுடன், பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. அனைத்து மக்களின் உயிர் காக்கும் விவசாயிகளுக்கான போராட்டம் என்கிறபோது அது எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதை உளவுத்துறையினர் நிச்சயமாக அறிக்கை தயாரித்து, காவல்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் முதல்வரின் கைகளில் சேர்த்திருப்பார்கள்.

அந்த அறிக்கை ஏற்படுத்திய பதற்றமோ என்னவோ, டிச.3 அன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுகவை எதிர்ப்பதாக நினைத்து, விவசாயிகளுக்கு எதிரான குரலில் உளறிக் கொட்டியிருக்கிறார்.

திமுக, மக்கள் நலனுக்கான அறப்போர்க் களங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கும் தார்மீக ஆதரவு தரும் வகையில் திமுக நடத்தும் கருப்புக் கொடி அறப்போராட்டத்தில் சேலத்தில் உங்களில் ஒருவனான நான் பங்கேற்கிறேன்.

வேலூரில் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏவும், மயிலாடுதுறையில் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும், திருச்சியில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு எம்எல்ஏவும், திண்டுக்கல்லில் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏவும், திருவண்ணாமலையில் துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி எம்எல்ஏவும், ஈரோட்டில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனும், நீலகிரியில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும், நாமக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்.பி.யும் பங்கேற்கிறார்கள்.

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டச் செயலாளர்கள் முன்னெடுப்பில் ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்புடன் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்! விவசாயி வேடம் போட்டு, பசுமை தழைக்கத் தடைபோடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட, கருப்புக் கொடிகள் உயரட்டும்! தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்! டெல்லி போல குலுங்கட்டும் தமிழகம்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.