இன்று (டிசம்பர் 4) தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். இதற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசீய முதல்வர்,

``மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை" என்று கூறினார்.

முதல்வர் பேசும்போது, ``அரசால் நிறைவேற்றப்படும் எந்தத் திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று திமுக தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும். அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள், மதுரை மாநகரத்தில் நான் அறிவித்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு அவதூறு செய்தியை சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம்.

இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். ஒன்றுமே செய்யவில்லை என்றால், இவை எல்லாம் இந்த மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட திட்டங்கள். இன்றைக்குக்கூட, சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, ஏற்கனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன். அம்மாவின் அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சனை இருக்கக்கூடாது என்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம். 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம்.

ஆகவே, எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர் பெருமக்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் மரியாதைக்குரிய துணை முதலமைச்சர். அவர் நிதி அமைச்சராக இருக்கின்றார். எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கேற்றவாறு நிதியை உருவாக்கி எங்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றார். துணை முதலமைச்சர் நிதி அமைச்சராக பல ஆண்டுகாலம்  அமைச்சரவையில் இடம் பெற்று, மிகுந்த அனுபவம் இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார்  என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதேபோல, உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களும், அரசு அறிவித்த திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியதன் காரணத்தால், அதிகமான விருதுகளை உள்ளாட்சித் துறையின் மூலமாக நாங்கள் பெற்றிருக்கின்றோம். தேசிய அளவில் அதிக விருதுகளை குவித்த துறை உள்ளாட்சித் துறை. இதுபோன்று, எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை என்று அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வேளாண் பெருமக்களுக்கு கடனுதவி வழங்கும் அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் கடனுதவி வழங்குகின்ற காரணத்தால், என்றைக்கும் இல்லாத அளவிற்கு தற்பொழுது டெல்டா பகுதியில் அதிக விளைச்சலை கண்டிருக்கின்றோம். அதேபோல, வருவாய்த் துறையில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக அம்மாவின் அரசு இருந்து கொண்டிருக்கிறது.