புரட்சி தளபதி விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படத்தை வெளியிடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், இன்று தடை உத்தரவை நீக்கி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. 

இதுபற்றி விஷால் கூறியதாவது நான் எனக்கும், என் தொழிலுக்கும் எப்போதும் உண்மையாகவே உள்ளேன். ஆகையால், எப்போதுமே தடைகள், சிக்கல்களை எதிர் கொள்கிறேன். சக்ரா படத்திற்கு இருந்து தடை நீங்கி, நாளை உலகளவில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

டிஜிட்டல் உலகில் நம்மையே அறியாமல் திருடப்படும் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை எந்த அளவுக்கு ஆபத்தானதாக பயன்படுத்த முடியும் என்பதே சக்ராவின் ஒன்லைன். வழக்கமான மிடுக்கான மிலிட்டரியில் வேலை பார்க்கும் கதாநாயகனாக வருகிறார் விஷால். அவருக்கு ஜோடியாக காவல்துறை உயர் பொறுப்பில் இருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஒரு தொடர் திருட்டு சம்பவத்தை விசாரிக்க விஷாலின் உதவியை நாடுகிறார் ஷ்ரத்தா. விஷாலும் அந்த திருட்டு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்ததால் உதவ முன்வருகிறார். ஆனால் ஷ்ராத்தாவை முழுக்க முழுக்க ஓரம் கட்டிவிட்டு விஷாலே அனைத்தையும் விசாரித்து முடிக்கிறார். ஷ்ரத்தா சொல்லும் சில பரிந்துரைகளையும் ஏற்க மறுக்கிறார். வழக்கமாக டான்ஸ்களுக்கு மட்டும் நடிகைகளை பயன்படுத்தாமல் காவல்துறை அதிகாரி வேடம் கொடுத்திருக்கிறார்கள் என்று திருப்திப்படுவதற்குள் விஷால் ஷ்ரத்தாவை கான்ஸ்டபிள் போல நடத்தி மட்டுப்படுத்தி விடுகிறார்.

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கிய இப்படத்தில் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. 

விஷால் தற்போது எனிமி படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். மிர்னாலினி ரவி, பிரகாஷ் ராஜ், கருணாகரன் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடைசியாக மம்தா மோகன்தாஸ் படத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.