தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உழைத்தவர் கேப்டன் விஜயகாந்த். மேலும் இவர் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில வருடங்களாக உடல்நல குறைபாடு காரணமாக சினிமா மற்றும் அரசியலில் பெரிய அளவில் நாட்டம் இல்லாமல் இருந்து வரும் விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கேப்டன் விஜயகாந்த் தரப்பில் தெளிவுபடுத்தும் விதத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில் விஜயகாந்த்துக்கு வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், பரிசோதனைக்காக சென்ற போது, விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது பூரண உடல் நலத்துடன் விஜயகாந்த் உள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பிரச்சனையாக உள்ளது. திரையுலகை சேர்ந்தவர்கள் தங்ளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவ்வப்போது அறிவிப்பதை பார்க்க முடிகிறது. சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. 

இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கேப்டன் விரைவில் குணமாகி வீடு திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் நல்ல மனசுக்கு அவர் குணமாகிவிடுவார் என்றாலும், அவருக்கு ஏற்கனவே உடல்நலக் கோளாறு இருப்பது தான் கவலை அளிக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய தன் கல்லூரியில் இடம் கொடுத்தவர் விஜயகாந்த். இதை பார்த்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் உள்பட பலர் விஜயகாந்தை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் படத்தில் வரும் வசனம் போல் பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வர வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா உயிர் இழந்தார். தெலுங்கு திரையுலகில் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார்கள். 

சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகபாபுவுக்கும், இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவுக்கும், ராமராஜனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.