வாகை சூடவா படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். வத்திக்குச்சி, நய்யாண்டி, உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2, ராட்சசன் போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மெலடியில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஜிப்ரான் இசையில் வெளியாகவிருக்கும் க.பெ.ரணசிங்கம் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. 

விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். விஜய்சேதுபதி ஜோடியாகவும், லீட் ரோலில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணியான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியும் சமீபத்தில் நிறைவடைந்தது. 

வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளை முடித்தார். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார். 

சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக தண்ணீரை வியாபாரம் ஆக்கிய சிலருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்துவது போல படத்தின் டிரைலரில் காட்டப்பட்டிருந்தது. 

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. டி சீரிஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிரிக்கல் வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அழகிய சிறுக்கி பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுத கோல்ட் தேவராஜ் என்பவர் பாடியிருந்தார். 

க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு இருப்பதால், இதனை Zeeplex தளத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அக்டோபர் 2-ம் தேதி முதல் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகும். கடந்த வாரம் இரண்டாம் பாடலான புன்னகையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சுந்தரய்யர் பாடிய இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் இசை பிரியர்களை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் தற்போது மூன்றாம் பாடல் பறவைகளா வெளியானது. வைரம் பதித்தது போல் எழுத்துக்களை வடிவமைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. மணிகண்டன் இந்த பாடலை பாடியுள்ளார். சொந்த ஊரை விட்டு வெளிநாட்டில் சாதி மத பேதமற்று, உற்றார் உறவினர் நண்பர்கள் சுக துக்கமின்றி, குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல ஓடி கொண்டிருக்கும் குடி பெயர்ந்தோருக்கு இந்த பாடலை சமர்ப்பித்துள்ளார் படக்குழுவினர்.