தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. திரைக்கு பின்னாலும் ஹீரோவாக திகழும் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் சூர்யா படங்கள் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 23 ஆண்டுகள் தன் நடிப்பின் மூலம் ஆறிலிருந்து அறுவது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. 

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தில் மீதம் இருக்கும் மூன்று பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறார். இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகவில்லையே என்ற சோகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து தான் வருகிறது. இருப்பினும் கொரோனாவால் ஏற்பட்ட இந்த சூழ்நிலையில் ரசிகர்களின் நலன் கருதி சூர்யா இந்த ஒரு முடிவை எடுத்துள்ளார். 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என்று இணையத்தில் செய்தி ஒன்று வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. இதை கண்ட சூர்யா ரசிகர்கள், நிஜமாகவே ட்ரைலர் வெளியாகுமா என்ற குழப்பத்தில் தவித்தனர். இந்த விவகாரம் குறித்து சரியான நேரத்தில் பதிவு செய்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம். 

அவர்கள் செய்த பதிவில், வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெளிவு செய்தனர். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். மீதம் உள்ள மூன்று பாடல்களா அல்லது ட்ரைலரா இருக்குமா என்று பதிவின் கீழ் கமெண்ட் செய்து கேட்டு வருகின்றனர்.