தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து டெல்லி ஷாகின் பாக் போன்ற பொது இடங்களைப் போராட்டக்காரர்கள் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதேசமயம் ஜனநாயகம் மற்றும் எதிர்ப்பு இரண்டுமே கைகோத்துச் செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக பேசிய நீதிபதிகள், சாலைகள் அல்லது பொது இடங்களை போராட்டக்காரர்கள் காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்று உச்ச நீதிமன்றம் சார்பில் தெளிவாக தெரிவித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 3 மாதத்திற்கும் மேலாக  போராட்டம் நடைபெற்றது. குழந்தைகள்,பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.  

இந்த சூழலில், போராடுவதற்கான வழிமுறைகள், வழிகாட்டுதல்களை வகுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாலைகள் அல்லது பொது இடங்களை கால வரையின்றி  ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. 

உச்ச நீதிமன்றம் மேலும் கூறுகையில், ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த இடமாக இருந்தாலும் பொது இடங்களை காலவரையின்றி ஆக்கிரமிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை.  பொதுமக்களுக்கு இடையூறு அளிப்பதாகவும் அவர்களின் உரிமைகளையும் பறிப்பதாக பொது இடங்களை ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்கள் அமைகின்றன.  

அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உரிய முறையில் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளக்கூடாது. இத்தகைய போராட்டங்களை அப்புறப்படுத்த நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்க தேவையில்லை. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து போராடும்  உரிமையை நாங்கள் பாராட்டுகிறோம், அது நியமிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும்” எனவும் தெரிவித்தது.