தமிழில் ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆரி. அஸ்வின் சரவணன் இயக்கிய மாயா படத்தில் நயன்தாராவுடன் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இவர் தனது பெயரை கடந்த வருடம் ஆரி அர்ஜுனன் என்று மாற்றி வைத்துக்கொண்டார். 

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற, பிக் பாஸ் நான்காம் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் ஆரி அர்ஜுனன் முதல் இடத்தையும், பாலா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் கிடைத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

ஆரிக்கு பரிசுத் தொகையாக ரூ 50 லட்சம் கிடைத்தது. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அபின் இந்தப் படத்தை இயக்குகிறார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது.

ஆரி ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன் கிரைம் த்ரில்லர் படமான இதில் முனிஷ் காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளர் ஆகிறார். பிவி கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் பாடல் எழுதுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் ஆரி கமிட்டாகி வருகிறார். ரசிகர்களின் அபிமானத்தை பெற்ற ஆரிக்கு இன்னும் பல அற்புதமான வாய்ப்புகள் வரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை ரசிகர்கள்.