“கைலாசா நாட்டிற்கு புதிய கரன்சியை அறிமுகப்படுத்தப் போவதாக” சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்தியானந்தா, மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளில் அவர் ஆஜராகாமல், தலைமறைவானதால், அவருக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.

எனினும், இந்த கைது நடவடிக்கைப் பெற்றியெல்லாம் கவலைப்படாத  சாமியார் நித்தியானந்தா, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்த நாட்டில் குடியேறுவதற்கு சுமார் 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறி, நித்தியானந்தா அடுத்தடுத்து அதிர்ச்சியைக் கிளப்பினார்.
 
மேலும், வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்தியும் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வந்த சாமியார் நித்தியானந்தா, கடந்த 3 மாத காலமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் பேசிய சாமியார் நித்தியானந்தா, “கைலாசா நாட்டிற்கு என்று, தனி கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கென்று புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும்” அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். 

மேலும், “ எனக்கு நிறைய நன்கொடைகள் வந்திருக்கின்றன. அவற்றை நல்ல காரியங்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன். அதற்காக நமக்கு என்று ஒரு வங்கி தொடங்க உள்ளேன். 

வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது” என்றும் அறிவித்தார்.

அத்துடன், “நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” தெரிவித்தார்.

குறிப்பாக “கைலாசா நாட்டிற்கான பணமும் தற்போது வடிவமைக்கப்பட்டு விட்டது” என்றும், அதிர்ச்சியைக் கிளப்பினார். “அதில், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியையும், வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம்” என்றும், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கிளப்பினார் நித்தியானந்தா.

“கைலாசா ரிசர்வ் வங்கியானது, சட்டத்தின் படியே தொடங்கப்பட்டு உள்ளது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்காது” என்றும், நித்தியானந்தா கூறினார். 

“கைலாசா நாட்டிற்கான கரன்சி பெயர், வடிவமைப்பு ஆகியவை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளேன்” என்றும், சாமியார் நித்தியானந்தா அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டார். இதன் மூலம் நித்தியானந்தா, புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.