இங்கிலாந்தில் சீனாவுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தானியர்கள், இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வைரலாகி வருகிறது.

இந்தியப் பகுதிக்கு உட்பட்ட லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற பயங்கர மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில், இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இதனையடுத்து, எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக ஆலோசிக்கவும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசி முடிவு எடுக்கவும் பிரதமர் மோடி தலைமையில், காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது பேசிய பிரதமர் மோடி, “எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாக” கூறினார். அத்துடன், “ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக் கூடிய திறன் நமது ஆயுதப் படைகளுக்கு உள்ளது” என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

அதன் தொடர்ச்சியாக, சீனா தனது 10 ஆயிரம் ராணுவ வீரர்களை இந்திய எல்லையில் குவித்தது. அதற்குப் பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை எல்லையில் குவிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக, இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு தரப்பிலும் எல்லையிலிருந்து ராணுவம் பின் வாங்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லையில் சீனா, தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக்கத் தகவல்கள் வெளியானது. 

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால் மீரை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி செய்து வருவதாகக் கூறப்பட்டது. குறிப்பிட்ட அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களைச் சீனா மேற்கொண்டு வருவதாகவும், 

இதையே காரணமாக வைத்து, அந்த பகுதியில் விமான நிலையம், ரயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்து வருகிறது என்றும் செய்திகள் வெளியானது.

ஏற்கனவே, சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் வழியாகப் பயணிக்கிறது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கொடுக்கும் போது, சீனாவும் தன்னை ராணுவ ரீதியாக, அந்த பகுதியில் பலப்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இதன் மூலமும் இந்தியாவைச் சுற்றி வளைக்கச் சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், பாகிஸ்தான் எல்லையில் சீனா 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும், சொந்த நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, தனியாக ஒரு பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது என்றும், அந்த குறிப்பிட்ட பகுதிகளில் பாகிஸ்தானியர்கள் கூட அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. 

அத்துடன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கட்டுமான பணியில் சுமார் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது என்றும், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சுமார் 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாகவும், ராஜஸ்தான் எல்லைக்கு 8 கிலோ மீட்டர் தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிய வந்தது. 

குறிப்பாக, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாகவும், இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாஜகவின் சீனாவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். சீனா பொருட்களையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் சீனாவுக்கு எதிராக இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு, சீனாவிற்கு எதிராகத் திரண்ட இந்தியர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் தங்கள் நாட்டின் மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்திய தேசிய கீதத்தைப் பாடினர். அப்போது, அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தானை சேர்ந்தவர்களும், இந்திய தேசிய கீதத்தை சேர்ந்து பாடினர்.

தற்போது, பாகிஸ்தானியர்கள், இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.