“டீ கடைகள் இல்லை, காய்கறி மற்றும் மளிகை கடைகள் இனி காலை 10 மணி வரை மட்டுமே செயல்படும்” உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

கொரோனா தொற்றின் 2 வது அலையானது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில், தமிழகத்தில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து வருகிறது.

இதனால், தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 10 ஆம் தேதி முதல், வருகிற 24 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா குறைந்ததாக இல்லை. அத்துடன், பலரும் கட்டுப்பாடுகளை மதிக்காமல் வழக்கம் போல் வெளியிடங்களுக்கு எப்போதும் போல சுதந்திரமாக சென்று வந்துள்ளனர்.

இதனால், தமிழகம் முழுவதும் ஊரடங்கைத் தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த இரு ஆலோசனைக் கூட்டத்திலும், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கை இன்னும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

அதன் படி,

- தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி மதியம் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

- இந்த கடைகளில், ஒரே நேரத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- டன்சோ போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், கூறப்பட்டு உள்ளது. 

- குறிப்பிட்ட இந்த மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

- ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- ஏ.டி.எம்., பெட்ரோல் டீசல் பங்குகள் ஆகியவை எப்போதும் போல செயல்படும்.

- பொது மக்கள் தங்களுக்கு தேவையான மளிகை, பலசரக்கு, காய்கறிகளை தங்களது வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்குமாறும், மேற்சொன்ன பொருட்கள் வாங்க வெகு தூரம் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

- குறிப்பாக, டீ கடைகள் மதியம் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டீ கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது, காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

- மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி முடிய செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

- அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

- இந்த இ-பதிவு முறையானது வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

- ஏற்கனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும். 

தமிழக அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது, இன்றைய தினம் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது.