முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இதற்கிடையே, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சிறுநீரக தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனுக்கு 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள் பரோல் காலம் இன்றோடு நிறைவடைகிறது. 

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கில் பேரறிவாளன், மத்திய அரசு தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வக்கீல்களுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு (நவம்பர் 23) ஒத்தி வைத்தனர். 

இந்த சூழலில் பேரறிவாளன் மனு தொடர்பாக சி.பி.ஐ.யின் எம்.டி.எம்.ஏ. அமைப்பின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் டி.புனிதமணி சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ராஜீவ் காந்தி கொலை சதியில் பேரறிவாளனின் பங்கை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. அவரை விடுவிக்க பரிந்துரைத்த தமிழக அரசின் தீர்மானத்தின் மீதும், அவரது கருணை மனு மீதும் கவர்னர் முடிவு எடுக்காமல் இருப்பதற்கும் சி.பி.ஐ.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை தொடர்பான தகவலை கேட்டு எந்தக் கடிதமும் கவர்னர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. மேலும் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை குறித்த தகவலை யாருக்கும் வெளிப்படுத்த முடியாது. பேரறிவாளனை விடுவிப்பது குறித்து கவர்னர்தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பேரறிவாளன் சார்பிலும், சில சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை குறிப்பிட்டு பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரம் நீட்டித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர். சிகிச்சைக்கு செல்லும்போது பேரறிவாளனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தன்னை விடுவிக்க கோரிய பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.