திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்ததால் நடிகை சஞ்சிதா ஷெட்டி, புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறையத் தொடங்கிய நிலையில், தமிழ் நாட்டில் சில காட்டுப்பாடுகள் இப்போது வரை நடைமுறையில் உள்ளன.

அதன் படி, தமிழகத்தின் சில முக்கிய கோயில் நிகழ்வுகள், அரசியல் கட்சி கூட்டங்கள் உள்ளிட்ட சில வசியங்களுக்கு சில கட்டுப்பாடுகள் தற்போது வரை தொடரவே செய்கின்றன.
 
அந்த வகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாகக் கடந்த 29 ஆம் தேதி சுமார் 2.668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்பட்டது. 

இந்த மகா தீபம் வருகிற 9 ஆம் தேதி வரை பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும். அந்த மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள இந்த மகா தீபத்தை பக்தர்கள் மலையேறிச் 

சென்று பார்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
 
மேலும், அந்த மலையில் முக்கிய வழி தடங்களில் வனத்துறையினர் மற்றும் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான், திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்டு உள்ள மகா தீபத்தை சூது கவ்வும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடத்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி, குறிப்பிட்ட அந்த மலை ஏறி சென்று தரிசனம் செய்திருக்கிறார். 

அத்துடன், அந்த மகா தீபத்தை அருகில் நின்று தரிசிப்பதை புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துக்கொண்ட அவர், அதனைத் தனது இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

முக்கியமாக, அந்த புகைப்படத்துடன் அவர் பதிவு செய்துள்ள பதிவில், “திருவண்ணாமலை மலை மீது ஏறியது உண்மையிலேயே அதிசயம் என்றும், மலையின் உச்சியை அடைய 1 மணி 40 நிமிடங்களானது” என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதே போல், “ஆங்காங்கே ஓய்வெடுத்து கீழே இறங்க 2 மணி நேரம் 30 நிமிடங்களானது” என்றும், அந்த பதிவில் அவர் கூறியிருந்தார்.

இதனால், இந்த புகைப்படங்கள் மற்றும் நடிகை சஞ்சிதா ஷெட்டி மகா தீபம் தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம், “பக்தர்கள் மலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்தது குறித்து” செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய அவர், “மகா தீபத்தை காண பக்தர்கள் மலை ஏறி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், சிலர் மலை ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்கின்றனர். மலை ஏறி வரும் பக்தர்களைத் தடுப்பதற்கு வனத்துறையினர் முக்கிய பாதைகளில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும், தடையை மீறி மலை ஏறி செல்லும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை என்றும், அத்துடன் உள்ளூரைச் சேர்ந்த வழிகாட்டிகள் மூலமாகத் தான் அவர் மலைக்கு சென்று இருப்பார் என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் உறுதி அளித்தார்.

இதனால், நடிகை சஞ்சிதா ஷெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அவர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதனிடையே, பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், நடிகை சஞ்சிதா ஷெட்டி மலை ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.