சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படுவதாகக் கூறி பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலைய் மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என, ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் தொழில்நுட்ப ரீதியில் அவசியமானது எனவும், அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 12) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ரயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்!

அனைத்து ரயில்களிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% சாதாரண வகுப்புப் பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல், முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். ரயில்வே துறை ஏழைகளின் தோழனாகத் தொடர வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம், ரயில்வே அறிவிப்பு ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயல் என ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அனைத்து ரயிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் 50% பெட்டிகள் சாதாரண வகுப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமன்றி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

``சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி பெற்ற நிறுவனமாக அறிவிக்க வேண்டும், அதற்கு தேவையான நிதியை பல்கலைக்கழகமே திரட்டிக்கொள்ளும் என்று மத்திய அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறும் விஷயத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக துணைவேந்தர் சூரப்பா செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்தை 3 ஆண்டுகளுக்கு வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே. அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் சூரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். 69 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை முறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் ஆகியவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.