கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. தற்போது,  கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில்,  பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், திறக்க வேண்டாம் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில்,   9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் கடந்த வாரம் அறிவித்தார்.  தொடர்ந்து,  நேற்று முன்தினம் (நவம்பர் 9) பள்ளிகள் திறப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது
 
அதன் முடிவு தெரியவராத சூழலில், கல்லூரி மாணவர்கள் தங்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படுமா என கேள்வி எழுப்பிய  நிலையில், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படுவது குறித்து, நவம்பர் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (நவம்பர் 10) தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, டிசம்பர் மாதத்துக்குப் பின் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாமே என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (நவம்பர் 11) கருத்துத் தெரிவித்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவெடுக்கும் போது, ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட நிகழ்வுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக் கேட்புகளை தமிழக அரசு நடத்தி வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தங்களது இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இது நீதிமன்றத்தின் கருத்துதான் என்றும், தமிழக அரசு சிறப்பான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதேவேளையில், தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோர் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 16-ம் தேதி பள்ளி, கல்லுரிகளைத் திறப்பதற்கு எதிரான வழக்கை நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நவம்பர் 16ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என தேனியைச் சேர்ந்த ராம் பிரசாத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே? என தெரிவித்தனர். இது நீதிமன்றத்தின் கருத்துதான் என்றும் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளே கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் சூழலில் பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு மேல் திறக்கலாம் என்றும் நீதிபதிகள் கூறினர். அருகில் உள்ள மாநிலங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருவதாகவும், அதிகப்படியான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம் என்றே கூறி வருவதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.