திருப்பூரில் ஒரே வீட்டில் ஒரே ரூமில் தாயும் மகளும் டிக்டாக் காதலில் மூழ்கிக் கிடந்த நிலையில், தாயும் மகளும் தங்களது காதலர்களோடு ஒரே நேரத்தில் ஓட்டம் பிடித்த அவமானம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

உலகில் புதிது புதிதாக அறிமுகம் செய்யப்படும் தகவல் தொழில் நுட்பங்கள் எல்லாம் நல்ல விசயங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அருமை பெருமை தெரியாத சில அரை குறை ஆர்வ கோளாறுகள், அதைத் தவறாகப் பயன்படுத்தும் போது, அதன் விளைவுகள் சுற்றி இருக்கும் அனைவரையும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான், திருப்பூரில் தற்போது அரங்கேறி உள்ளது.

திருப்பூர் பொம்மன் நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, சொந்தமாக ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். ரவிக்கு, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கனக வல்லி உடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இதனிடையே, ரவி தனக்கு சொந்தமாக ஒர்க் ஷாப்க்கு சென்ற பிறகு, அவரது மனைவி கனகவல்லி சொந்தமாக அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார்.

அத்துடன், அழகு நிலையத்தில் பணி இல்லாத நேரத்தில் டிக்டாக்கில் மூழ்கி உள்ளார் கனக வல்லி. இதனால், கனகவல்லியை டிக்டாக் என்னும் நோய் ஆட்கொண்டு விட்டது. அழகு நிலையத்தில் இருக்கும்போதும், டிக்டாக்கில் மூழ்கி இருந்த கனகவல்லி, வீட்டிற்குச் சென்ற பிறகும் டிக்டாக்கே கதி என்று கிடந்துள்ளார். 

தாயாரின் இந்த டிக்டாக் மோகம்,  பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த அவரது மகள் 17 வயது சிறுமிக்கும் தொற்றி உள்ளது. இதனால், அவரும் டிக்டாக்கிலேயே மூழ்கிப் போனார். 

தாயாரும், மகளும் டிக்டாக்கில் மூழ்கிக் கிடந்த வேளையில், தாய் கனகவல்லி டிக்டாக் மூலமாகவே ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் நட்பாகி, பின்னாளில் அது கள்ளக் காதலாக மாறி அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

அதே போல், அவரது மகளுக்கும் டிக்டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் ஒரு இளைஞனைக் காதலித்து வந்து உள்ளார். இதன் காரணமாக, தாயும் - மகளும், ஒரே வீட்டில் ஒரே ரூமில் அமர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். தாயின் காதல் விசயம் மகளுக்கும், மகளின் காதல் விசயம் தாயிக்கும் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ரவி, தாயும் மகளும் ஒரே ரூமில் தங்களது காதலர்களோடு செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

மேலும், மனைவி மற்றும் தன் மகளையும் ரவி கண்டித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாயும் - மகளும், ரவி உடன் சண்டைக்குச் சென்றுள்ளனர். அத்துடன், தாயும் மகளும், ரவியை வெறுத்து ஒதுக்கத் தொடங்கி உள்ளனர்.

இதனால், ரவியும் மனைவியையும் மகளையும் கண்டிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால், தற்போது அவர்களது காதல் முற்றிய நிலையில், தாய் - மகள் இருவருமே தங்களது காதலர்களோடு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ரவி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாகத் தாயையும், மகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், இருவரையும் ரவி உடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால், ரவி உடன் நில நாட்கள் இருந்து விட்டு, அதன் பின்னரும் தாயும் - மகளும் மீண்டும் தங்களது காதலர்களைத் தேடி ஓட்டம் பிடித்துள்ளனர். 

இதனால், அவமானம் அடைந்த ரவி, “எனது மகனைப் பார்த்துக்கொள்ளுமாறு” தனது சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால், அவரது 15 வயது மகனின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.