கந்த சஷ்டி கவசம் சொல்லும் கருத்துக்களை, ஆபாசமாகச் சொல்லிய காரணத்துக்காக, கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது கடந்த வாரம் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோல, அந்த வீடியோவில் பேசியிருந்த வி.ஜே. சுரேந்திரன், ஜூலை 17 ம் தேதி, புதுச்சேரியில் சரண் அடைந்திருந்தார்.

இவர்கள் இருவரில், செந்தில்வாசனிடம் நடத்திய விசாரணையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு வீடியோ தயாரிக்கும் ஸ்டுடியோவாகச் செயல்பட்டு வந்த சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் 2 நாட்களாக ஆய்வு செய்து வந்தனர்.

அங்குக் கிடைக்கப்பெற்ற ஹார்ட்டிஸ்க், பென் டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர். மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏடிஎஸ்பி மற்றும் உதவி ஆணையர் தலைமையில் அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். அனைத்துக்கும் பிறகு, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஒரு காவலர் நியமிக்கப்பட்டிருந்தார். இதுதவிர கறுப்பர் கூட்டத்திற்குச் சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸூக்கும் சீல் வைக்கப்பட்டது.

சரணடைந்திருந்த சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்திருந்தனர். அதில் உரிய அனுமதியின்றி இ-பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்தது, கூட்டம் கூட்டியது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 3 பிரிவுகளில் சுரேந்தர் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்கள் மட்டுமன்றி, அந்த கறுப்பர் கூட்டம் இணைய தள சேனலின் கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்டது.

இந்த வழக்குகளோடு, இந்து அமைப்பினரும் பாஜகவும் அளித்த கந்த சஷ்டி கவச அவமதிப்பு புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்தர் ஆகியோரை தனிப்பட்டு விசாரித்தனர். முடிவில் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற வாசலில் வைத்து, வழக்கில் தொடர்புடைய சுரேந்திரன் பத்திரிகையாளர் மத்தியில் பேசியிருந்தார். அப்போது, `எங்கள் மீது புகார் அளித்தவர்கள், எங்கள் விட்டிலுள்ளவர்களை மனரீதியாகத் துன்புறுத்தி, அவர்களுக்கு அழுத்தம் தரத்தொடங்கிவிட்டனர். அதனால்தான் நான் சரணடைந்து இருக்கின்றேன். 

நாங்கள் இல்லாத விஷயத்தை வீடியோவில் சொல்லவில்லை. இருக்கும் விஷயத்தை, மக்களுக்குப் புரியும்படியான மொழியில் பேசியிருந்தோம். அவ்வளவுதான். அது தவறென சொல்லி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எதுவாகினும் சட்டரீதியாக சந்திக்க, நாங்கள் தயார் தான்!' என சொல்லியிருந்தார்.

இப்படித் தொடர்ந்து கொண்டிருந்த இந்த நேற்று கறுப்பர் கூட்டத்தில் வெளியாகியிருக்கும் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டது. வருங்காலத்தில் சர்ச்சையாகலாம் என்ற கணிப்பின் அடிப்படையில் அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் சார்பில் சொல்லப்பட்டது. சுரேந்திரன், செந்தில்நாதன் மட்டுமன்றி, கேமரா மேன் சோமசுந்தரம், வீடியோ எடிட்டர் குகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சேனலின் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, இன்றைய தினம், சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று,  நபிகள் நாயகம் குறித்து ஆபாசமாகப் பேசிய கோபால் என்பவர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கோபால் குறித்த விவரம் இங்கே...

இந்து தமிழர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த கோபால் என்பவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துகளை பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கத்தினர், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார் கோபால் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கோபால் மீதும் தற்போது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது.

 

- பெ.மதலை ஆரோன்.