ஓபிசி. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு நீண்ட காலமாக அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அபயநாத் என்பவர் வழக்கு தொடுத்தார். இதையடுத்து, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. ஆனால், மருத்துவத்தில் ஓபிசி மாணவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தமிழகத்தில் இருக்கும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் 1996ல் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கு, உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. அந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பிலும் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், `பிற்படுத்தபட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. அப்படி வழங்கினாலும் உச்ச நீதிமன்றம்தான் அதற்கான தீர்ப்பை வழங்க முடியும். ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, உச்ச நீதிமன்றதில் டி.கே.பாபு என்பவர் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் வாதிட்டார். அப்போது `உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம்' என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.  

இதைத் தொடர்ந்து மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அதில் ``ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு மூன்று பேர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். தற்போது இருக்கும் சூழலின் அடிப்படையில் மத்திய அரசு முடிவை எடுக்கலாம்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், ``மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டுள்ளது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும்" என்றும் இன்று மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி , நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, வழங்கிய அந்தத் தீர்ப்பில் ``மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் நடைபெற்று கொண்டுள்ளது. மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், எம்.சி.ஐ-யும் தீர்மானிக்க வேண்டும். இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சில் வாதம் ஏற்க முடியாது. மருத்துவ கவுன்சில் விதிகளில் மாநில இடஒதுக்கீடு பின்பற்ற கூடாது என எந்த விதிகளும் இல்லை.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை. மத்திய - மாநில அரசுகளின் சுகாதார துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சில் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். மூன்று நபர் கமிட்டி அமைத்து, மூன்று மாதங்களில் விசாரித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என்றும் கூறப்பட்டுள்ளது.