பூச்சி மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து மனைவியே கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், கணவன் மற்றும் கள்ளக் காதலன் இல்லாமல் மேலும் ஒரு கள்ளக் காதலன் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த 39 வயதான தரணி தரன், வாடகை கார் ஓட்டி வந்தார். இவருடைய மனைவி 31 வயதான பவானி வீட்டில் இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளன.

இதனிடையே, சென்னை பூந்தமல்லி திருமால் நகரைச் சேர்ந்த 31 வயதான தினேஷ், தரணி தரன் உடன் சேர்ந்து, அவரும் வாடகை கார் ஓட்டி வருவதாகத் தெரிகிறது. அத்துடன் தினேஷ், ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரும் நண்பர்கள் என்பதால், தினேஷ் அடிக்கடி தரணி தரன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

முக்கியமாக, தினேஷ் - தரணி தரன் ஆகிய இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மது போதையில் இருக்கும் தரணி தரனை வீட்டிற்கு விட வரும் போது, தரணி தரன் மனைவிக்கும், தினேஷ்க்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. 

இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும், தங்களது கள்ளக்காதலுக்குக் கணவர் இடையூறாக இருப்பதால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதன் காரணமாக, கடந்த 21 ஆம் தேதி பூச்சி மருந்துக்கடையில் இருந்து பூச்சி மருந்தை வாங்கி வந்து உணவில் கலந்து கொடுத்து, கணவரைக் கொன்றுவிடும் படி தினேஷ் கூறி உள்ளான்.

அதன்படி, பவானியும் தன் கணவருக்கு இரவு சாப்பாடு கொடுக்கும் போது உணவில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். அதனைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கிய தரணிதரன், 22 ஆம் தேதி காலையில் வழக்கம் போல் எழுந்து வாந்தி எடுத்துள்ளார். அத்துடன், இரவில் மது குடித்ததால், தற்போது வாந்தி வருகிறது என்று நினைத்த அவர், மனைவியிடம் காபி வாங்கி குடித்துவிட்டு தன்னை பத்து மணிக்கு எழுப்பி விடுமாறு கூறிவிட்டு, மீணடம் அவர் வீட்டில் படுத்துத் தூங்கி உள்ளார்.

பூச்சி மருந்து கொடுத்தும் கணவன் சாகாததால் ஆத்திரமடைந்த மனைவி பவானி, தனது கள்ளக் காதலன் தினேசுக்கு தகவல் கூறி உள்ளார். இதனால், தினேஷ் உடனே வீட்டிற்கு வருவதாகக் கூறி உள்ளார். தினேஷ் வருவதற்குள், தனது 2 மகள்களையும் மாடியில் உள்ள தாத்தா வீட்டிற்குப் பவானி அனுப்பி  வைத்து உள்ளார்.

அதன்படி, அடுத்த சில நிமிடங்களில் தினேஷ் வீட்டிற்கு வந்ததும், தூங்கிக்கொண்டிருந்த தன் நண்பன் தரணிதரனின் கழுத்தை, தினேஷ் துப்பட்டாவால் இறுக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இதில், அவரது மனைவியும் ஒரு பக்கம் பிடித்துக்கொண்டதாகவும் தெரிகிறது. அத்துடன், கணவனின் கழுத்தை இறுக்கும் போது, மனைவி கண் எதிரே தரணி தரன் துடி, துடித்து இறந்து போனார். 

அதன் பிறகு, தரணிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்து விட்டு தினேஷ் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டான். அதன் பிறகு, “கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்குத் தானே கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டதாக” அவரது மனைவி பவானி கூறி நாடகம் ஆடி உள்ளார்.

இது தொடர்பாக  விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட தரணிதரன் உடலையும் பார்த்துள்ளனர். அப்போது, பவானியின் செயல்பாடுகளையும் கவனித்துள்ளனர். இதனால், பாவனி மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அப்போது, போலீசார் விசாரித்துள்ளனர். அவர்களிடமும், “கடன் தொல்லையால் துப்பட்டாவால் தனக்குத் தானே கழுத்தை இறுக்கிக் கொண்டு கணவர் தற்கொலை செய்து கொண்டதாக” மனைவி பவானி, பூந்தமல்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பவானியின் செல்போனை ஆராய்ந்தனர். அப்போது, தரணிதரன் இறப்பதற்கு முன்பும் தினேஷ்க்கு அதிகமான போன் பேசியது தெரிய வந்தது. இதன் அடிப்படையில், பவானி மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் அழைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், கள்ளக் காதலர்கள் இருவரும் சேர்ந்து தரணிதரனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், பவானியிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு, அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது, பவானிக்கு அதே பகுதியில் மேலும் ஒரு கள்ளக் காதலன் இருப்பதும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

மேலும், தரணிதரன் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து வீட்டில் கள்ளக் காதலர்கள் இருவரும் போலீசார் முன்னிலையில் நடித்துக் காட்டினார்கள். அதனை போலீசார் வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.

கள்ளக் காதல் மோகத்தால், மனைவியே கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனைக் கொலை செய்ததால், தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில். அவருடைய இரு மகள்களும் பெற்றோர் ஆதரவின்றி அநாதையாக நிற்கும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம், அப்பகுதியில், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.