மூன்று தினங்களுக்கு  முன் (அக்டோபர் 16), தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது :
 
``அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து கிடைத்தால் 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். நுழைவுத்தேர்வு, கூடுதல் கட்டணம் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவர். உயர் சிறப்பு அந்தஸ்து மூலம் வெளிமாநில மாணவர்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்தாலும் அண்ணா பெயர் நீக்கப்படாது.

இந்த நிலையெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் உயர் சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. சிறப்பு அந்தஸ்துக்காக எதையும் பறிகொடுக்க தமிழக அரசு தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம்; அதனால் உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை"

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடும் எதிர்ப்பு, தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்குப் பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இது காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கும் அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், அதன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் மன்றத்தில் இன்று நடத்தியிருந்தார். விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

``கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்விக்கொள்கை தேவை. இந்தியா இன்னும் அடையவில்லை" என்று தெரிவித்தார். மேலும், ``தமிழகமே உயர்கல்வியில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.  உலகளவில் இந்தியா ஆராய்ச்சியில்( புள்ளி 4.0%) என்ற மிக குறைந்த சதவிகிதத்தில் உள்ளதாக தெரிவித்தார். 2025ம் ஆண்டிற்குள் பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர் எண்ணிக்கையை அடைய புதிய கல்விக் கொள்கை அவசியம்" என்று தெரிவித்தார்.

``அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்க மறுத்தது அரசியல் உள்நோக்கம் கொண்டது. துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்ட அவர் தமிழக அரசு அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சிறப்பு அந்தஸ்த்திற்கான நிதியை பல்கலைக்கழகமே திரட்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதில் எந்த தவறும் இல்லை" என்று பாலகுருசாமி தெரிவித்தார்.

``அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழக அரசு அதன் விவகாரங்களில் தலையிட முடியாது என்று கூறிய அவர் இதன் காரணமாகவே சிறப்பு அந்தஸ்தை தமிழக அரசு ஏற்கவில்லை" என்றும் தெரிவித்தார்.