இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதுதொடர்பான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. போஸ்டர் வெளியானது முதலே பிரச்சனைதான்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரானவரான முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கண்டனக் குரல்களும் நடிப்பதால் என்ன என ஆதரவு குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனின் படத்தில் நடிப்பது குறித்து எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, முத்தையா முரளிதரன் தமிழின துரோகி ! விடுதலை புலிகளுக்கு எதிரானவர் ! அவரின் வாழ்க்கை வரலாறு படமான 800 திரைப்படத்தில் விஜயசேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டனக்குரல்கள், எதிர்ப்புக்குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம்தான். 

இன்று குரல் குடுக்கும் சில அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கே போனது இந்த தமிழ்ப்பற்று? தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை???

விடுதலை புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக்குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை??? மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள், தமிழினம் அழியக்காரணாம இருந்த சில கட்சியிடம், ஆளுவதற்கு தமிழ்நாட்டையே ஒப்படைக்க துடிக்கிறீர்களே!!! இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று!

ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து வி டும்! இந்தப் பதிவு முத்தையா முரளிதரன்க்கு ஆதரவானது அல்ல! சில தமிழப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது! இவ்வாறு இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பேரரசு. கடந்த 2005-ஆம் ஆண்டு விஜய் வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதையடுத்து இதே கூட்டணியில் சிவகாசி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களை பேரரசு இயக்கினார். ஊர்களின் பெயரை தலைப்பாக வைத்து படம் இயக்குவது இவரது குணாதிசயமாகிவிட்டது. இயக்குனர் பேரரசு கம்-பேக் தருவாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை ரசிகர்கள்.