“முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம்” என்று, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவுவதுடன், அதிக அளவிலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், 
இந்தியாவிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழ்நாடு தற்போது முதல் இடம் பிடித்து உள்ளது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் அதிகரித்துக் காணப்படும் கொரோனா பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாகத் தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் உள்ளிட்ட அத்திவாசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில், “முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம்” என்று, தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காகப் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். தமிழகத்தில் புதுசா அரசு அமைந்து 2 வாரங்கள் தான் ஆகி உள்ளது. இந்த 2 வாரத்தில் ஏராளமான திட்டங்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய், பெண்கள் எல்லாருக்கும் சாதாரண கட்டண பேருந்தில் கட்டணமில்லாத பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் தகுதிக்கேற்ற வேலை, இழப்பீடுகள் மற்றும் தூத்துக்குடி வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது. எழுவர் விடுதலைக்காகக் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கொரோனா நோயாளிகளுக்கும் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் செலவுத் தொகை பெறலாம் என அறிவித்து இருக்கிறோம் என்றும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் படி பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றம். இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்” என்றும், முதலமைச்சர் கூறியுள்ளார். 

மேலும், “இது எல்லாவற்றையும் விட முக்கியமானது, கொரோனோ தடுப்பு பணிகள் தான்” என்று, குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், “கடந்த 2 வாரத்தில் 17 ஆயிரம் புதிய படுக்கைகள் மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டு உள்ளது என்றும், தினமும் 1.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், புதிதாக 2 ஆயிரத்து 100 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்றும்” தெரிவித்தார்.

இவர்களுடன், “6 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்றும், தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக மாற்றி வருகிறோம்” என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

“தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரக் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது” என்பதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், “இன்று முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் அடிக்கோடிட்டுப் பேசி உள்ளார். 

இதனால், “மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சிறு சலுகைகள் அளிக்கப்பட்டது என்றும், ஆனால் அதை சிலர் தவறாகப் பயன்படுத்தி வெளியில் சுற்றி திரிந்ததால், தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது” என்றும், அவர் விளக்கம் அளித்து உள்ளார். 

“முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம் என்றும், முழு ஊரடங்கு என்பது கசப்பு மருந்து தான். ஆனால், அதை எடுத்து அருந்தியே ஆக வேண்டும்” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். 

குறிப்பாக, “தமிழக மக்களை கெஞ்சி கேட்கிறேன்” என்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்று, வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

“தமிழக மக்கள் அனைவரும் முழு உடல் நலம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்றும், முககவசத்தை முழுமையாக அணியுங்கள்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.