இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2! உலகம் முழுவதும் 5,418 பேர் பலி!!
By Aruvi | Galatta | 12:16 PM
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், இதுவரை சுமார் 137 நாடுகளுக்குப் பரவி உள்ளது. இந்தியாவில் இந்த நோயால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, டெல்லியில் கொரோனா பாதிப்பால் 69 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். மூதாட்டி உயிரிழப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்தது. அங்கு, உயிரிழந்த 76 வயது முதியவருக்கு, கொரோனா தொற்று இருந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.
அதேபோல், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலியில் மட்டும் சுமார் 17 ஆயிரத்து 660 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரசால் 250 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,266 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுமார் 70 ஆயிரத்து 956 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா பரவல் மருத்துவ அவசர நிலையாக அறிவிக்கப்படவில்லை என்றும், இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோரை மிக கவனமாகக் கையாள வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, வாகன ஓட்டிகளை வாயால் ஊதுமாறு கேட்டு பிரீத்திங் அனலைசர் கருவி மூலம் பரிசோதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.