டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 4 அரையிறுதி போட்டிகள் நடக்கும் நிலையில், குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலம் வென்று 
அசத்தி உள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப் போட்டியின் 86 கிலோ 
எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா, தனது அசத்தலான ஆட்டத்தின் காரணமாக தற்போது காலிறுதிக்கு முன்னேறி இருக்கிறார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியையுடன் மோதிய அவர், 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, வெற்றி பெற்றுள்ளார்.

அதே போல், மல்யுத்தம் 59 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவின் அரையிறுதி போட்டியில் ரவிகுமார் தாஹியா, வெற்றி பதக்கத்தை நெருங்கி வருகிறார். 

இவர், பல்கேரிய வீரர் வேங்கலோவை எதிர்கொண்டு, 14-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி, தனது அசாத்திய திறமையால் தற்போது அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தி உள்ளார். 

அத்துடன், இந்திய வீரர் ரவிகுமார் தாஹியா, அரை இறுதியில் உஸ்பெகிஸ்தான் வீரர் சனாயேவ்வை எதிர்கொண்டு மோதுகிறார். இந்த போட்டி இன்று பிற்பகல்  2.45 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், பெண்கள் குத்துசண்டை  69 கிலோ பிரிவில், இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு தகுதி பெற்று, சற்று முன்பாக மோதினார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய இளம் வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், சற்று முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலியை எதிர்த்து மோதினார். இதில், 0-5 என்று தோற்றாலும் முதல் 2 செட்களில் 5 நடுவர்களின் தீர்ப்பின் படி, 1 புள்ளி தான் அவரை விட குறைவாக லவ்லினா எடுத்தார். 

ஏற்கெனவே, வெண்கலம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் வென்று வெள்ளி அல்லது வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிரில் ஆடியது உலக சாம்பியன் துருக்கி வீராங்கனை என்பதால், அவருக்குச் சரியாக இவரும் பஞ்ச் கொடுத்து ஆடினாலும், அவரது துல்லியத் தாக்குதலை சற்று சமாளிக்க முடியாமல் போகவே, துரதிர்ஷ்டமாக அவரிடம் விழுந்தார்.

அத்துடன், அரையிறுதியில் 2 வது சுற்றில் லவ்லினா 2 முறை எச்சரிக்கப்பட்ட பிறகும், நடுவரின் உத்தரவுகளைக் கவனிக்காமல் இருந்த காரணத்தால் ஒரு புள்ளி அவருக்குக் குறைக்கப்பட்டது. சர்மெனேலிக்கு எதிராக வலுவான முறையில் தான் லல்லினா சமமாக ஈடுகொடுத்திருக்கிறார்.

இதன் மூலமாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா வெண்கலம் வென்ற, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், அவர் தற்போது பெற்றுள்ளார்.

அது போல், இந்தியா பெண்கள் ஹாக்கி அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்று இன்று அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டு மோதுகிறது. இதனால், இன்றைய போட்டிகள் அனைத்தும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, டோக்கியோ ஒலிம்பிக்கின் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.