பாஜக அமைச்சர் மீதான ஆபாச வீடியோ வழக்கில் திடீர் திருப்பமாக, இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளது கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த பாஜகவை சேர்ந்த 60 வயதான ரமேஷ் ஜர்கிஹோலி, அங்குள்ள ஒரு ஹோட்டல் விடுதி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் இளம் பெண்ணுடன் ஒருவருடன் ஆபாசமான முறையில் இருக்கும் வீடியோ மற்றும் வாட்ஸ் ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஆதாரங்கள் கடந்த வாரம் வெளியாகி கர்நாடக மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. 

வட கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், “அணைகள் குறித்து ஆவணப் படம் எடுக்கப் போவதாகவும், அதற்கு அரசு சார்பில் உதவி செய்யுமாறும்” அமைச்சர் ஜர்கிஹோலியை அணுகி இருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய அமைச்சர் ஜர்கி ஹோலி, அவருடன் பலமுறை பாலியல் உறவு வைத்துக்கொண்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து, “தன் மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபணமாகும்” என்றும், அவர் கூறியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, பாஜக அமைச்சர் ரமேஷ் ரமேஷ் ஜார்கிகோளி உடன் வீடியோவில் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் இளம் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். 34 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், பேசி உள்ள சம்மந்தப்பட்ட இளம் பெண், “ரமேஷ் ஜார்கிகோளியுடன் நான் இருந்த ஆபாச வீடியோ வெளியானதன் மூலம் எனது மானம், மரியாதை போய் விட்டது. இந்த வீடியோவை யார் எடுத்தது? யார் வெளியிட்டது? என்பது பற்றி எனக்கு தெரியாது.

எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறினார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து எனது வீட்டில் வந்து நிறைய பேர் கேட்கிறார்கள். எனது தந்தையும், தாயும் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளனர். நானும் 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்து விட்டேன். 

எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. இந்த வீடியோ வெளியான விவகாரத்தால் எனது குடும்பத்தினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. 

இதனால், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் எனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்” என்று, அந்த வீடியோவில் அந்த இளம் பெண் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜராகி முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். அதில், “குறிப்பிட்ட அந்த வீடியோவில் பாலியல் காட்சிகளில் இருப்பது நான் அல்ல என்றும், குறிப்பிட்ட அந்த வீடியோ காட்சியைக் காட்டி முதலில் என்னிடம் காண்பித்து பணம் பறிக்க திட்டமிட்டனர். இதற்கு நான் ஒத்துப்போகவில்லை என்பதால், காணொலிக் பதிவை வெளியிட்டு என் பெயரை கெடுக்க முயற்சித்து உள்ளனர்” என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் இதுவரை வீடியோ பதிவில் இருக்கும் சம்மந்தப்பட்ட பெண்  விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரின் வீட்டில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எனினும், அந்த பெண் தொடர்ந்து தற்போது வரை தலைமறைவாக இருக்கிறார் என்றும், கூறப்பட்டு வந்தன.

இந்நிலையில் தான், பாஜக அமைச்சர் மீதான ஆபாச வீடியோ வழக்கில் திடீர் திருப்பமாக, இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளது கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் தந்தை அங்குள்ள பெலகாவி ஏ.பி.எம்.சி. காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “எனது மகள் பெங்களூருவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து, தனியார் தங்கும் விடுதியில் வசித்து வந்தார். அப்போது, கடந்த 2 ஆம் தேதி யாரோ எனது மகளை கடத்தி சென்று, சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமை படுத்தி வருகிறார்கள்” என்றும் குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “அந்த ஆபாச வீடியோவை போலியாகத் தயாரித்து வெளியிட்டு உள்ளனர் என்றும், எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றும், இந்த ஆபாச வீடியோ வெளியானதால், எங்களது குடும்பத்திற்கு அவப்பெயரும், அவமானமும் ஏற்பட்டுள்ளது” என்றும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக, புகார் கொடுத்த பின்பு இளம் பெண்ணின் தந்தை, தாய், 2 சகோதரர்கள் சேர்ந்து பேசி ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் எனது மகள் போன்று இருக்கும், ஒரு பெண்ணின் ஆபாச வீடியோ 

வெளியாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தோம். அந்த வீடியோவில் இருப்பது பற்றி எனது மகளிடம் கேட்டபோது, “அதில் இருப்பது நான் இல்லை என்று கூறினார்.

என்னைப் போன்ற ஒரு பெண்ணின் உருவத்தைப் போலியாக உருவாக்கி, போலியான குரலைப் பதிவு செய்தும் யாரோ வெளியிட்டு இருப்பதாகக் கூறினார்“ அப்போது தான் அந்த வீடியோ போலியானது என்பது எங்களுக்கே தெரிய வந்தது. அதன் பிறகு, எங்கள் மகளை எங்களால் தொடர்பு கொள்ள முடியாமல் போய் விட்டது. 

இதனால், எனது மகள் கடத்தப்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது. எங்களது மகளை போலீசார் மீட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்றும், அவர்கள் உருக்கமாக போலீசாருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்த வீடியோ, அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கில் தனிப்படையும் அமைக்கப்பட்டு, இளம் பெண்ணை தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.